சென்னை: தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் வரும் 10, 11 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னைவானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளது.
வரும் 10, 11 தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும்.
நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக ஈரோட்டில் 99 டிகிரி, கரூர் பரமத்தியில் 97 டிகிரி, மதுரை விமான நிலையம் மற்றும் சேலத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.