கொடைக்கானல்: கொடைக்கானலில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால், மலைப்பூண்டு போதிய விளைச்சல் இல்லாமல் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.500-க்கு விற்பனையாகிறது.
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கவுஞ்சி, பூம்பாறை, கூக்கால், பழம்புத்தூர், கிளாவரை உள்ளிட்ட பகுதிகளில் 900 ஹெக்டேர் பரப்பளவில் மலைப் பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மலைப் பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவ குணம் கொண்டது. அதனால் கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. பயிரிட்ட 120 நாட்களில் மலைப் பூண்டு அறுவடைக்கு வரும். கொடைக்கானல் மலைப் பகுதியில் விளையும் பூண்டு சாம்பல் நிறத்தில் காணப்படும். காரத்தன்மையும் அதிகம். புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால், ஓராண்டு வரை கெடாமல் இருக்கும்.