சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்நுழைவாயில் முன்பு சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
கோயிலின் முன்பு தீ: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர்கோயிலின் ராஜகோபுர பிரதானநுழைவு வாயிலில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் மது போதையில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றிதீயிட்டு எரித்துள்ளனர். அதிர்ஷ்ட வசமாக கோயிலின் கதவு சேதம் அடையவில்லை. கோயிலின் முன்பு தீ எரியும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையடுத்து அந்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் சார்பில் மயிலாப்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையர் தலைமையில் போலீஸார் கோயிலுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற் கொண்டனர்.
கண்காணிப்பு கேமரா பதிவு ஆய்வு: இந்த சம்பவம் நடைபெற்றபோது கோயில் பாதுகாவலர்கள் யாரும் அங்கு இல்லை என்றும், கோயில் வாசலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பழுதாகி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கோயில் அருகேயுள்ள இடங்களில் பொருத்தப்பட் டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
விசாரணையில் மர்ம நபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதுவதாகவும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்வோம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
அமைச்சர் உறுதி: இந்த சம்பவம் தொடர்பாகஇந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, ‘கோயில் வாசலில் சில பொருட்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்ற மர்ம நபர்களை விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்போம்' என்றார்