மும்பை: கடந்த வாரம் ஓடிடியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மூன்று நாட்களில் 150 மில்லியனுக்கும் அதிகமான நிமிடங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.
சுதிப்தோ சென் இயக்கத்தில், அடா சர்மா, சித்தி இட்னானி , சோனியா பலானி உட்பட பலர் நடித்த படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கேரளாவில் பெண்களைக் கட்டாய மதமாற்றம் செய்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர்ப்பதாக இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியானபோது கேரளா உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது கொச்சியைச் சேர்ந்த ஆவணப்பட இயக்குநர் ஸ்ரீநாத், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஓவியர் அர்ச்சனா ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில், இந்தப் படம் கடந்த பிப்.16ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. வெளியான 3 நாட்களில் இப்படம் 15 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் ஸ்ட்ரீங் செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளதாக ஜீ5 தளம் தனது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துள்ளது.