விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை; எஸ்பி சுதாகர் அறிவிப்பு..!!

விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை; எஸ்பி சுதாகர் அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: August 24, 2022 View: 52

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விதிமுறைகள் கூட்டத்தில், 10 அடி உயரத்தைவிட அதிகமாக விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி இல்லை என மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர் தெரிவித்துள்ளார். 

நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி வரும் 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிலைகள் அமைப்பது மற்றும் அதற்கான முறைகளை கடைபிடிப்பது குறித்து காஞ்சிபுரத்தில்  வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம் நடந்தது. அதில், பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. சுதாகர் கூறியதாவது: 

விநாயகர் சதுர்த்தி விழாவானது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பாக நடைபெறவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தது.

இந்த ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 501 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்ய உள்ளனர். விநாயகர் சிலையை எந்த இடத்தில் வைத்தாலும் அந்த இடத்தின் உரிமையாளரது ஒப்புதல் கடிதம் இல்லாமல் வைக்கக்கூடாது. அதேபோல, விநாயகர் சிலையை வைக்கும் இடங்களில் மின்வாரியம், தீயணைப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகிய துறைகளின் தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டும். 

விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்பவர்கள் முறையாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அரசு அனுமதியில்லாமல் விநயாகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்யக் கூடாது.அனுமதிக்காக விண்ணப்பிக்கும் போது கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே அனுமதி பெற வேண்டிய துறைகளின் அலுவலர்கள் இருப்பார்கள். அவர்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களிடம் அனுமதி பெற்றுத் தரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அனுமதி தேவைப்படுவோர் ஒவ்வொரு துறையாக சென்று அலைய வேண்டிய அவசியம் இல்லை.

கண்டிப்பாக ஒலி பெருக்கி உரிமம் பெற்றிருக்க வேண்டும். பூஜையின் போது மட்டும் காலையிலும், மாலையிலும் 2 மணி நேரம் மட்டுமே ஒலிபெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வழிபாடு செய்யப்படவுள்ள விநாயகர் சிலையின் உயரம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். வழிபாடு செய்யப்படும் இடத்திற்கு அருகில் அரசியல் மற்றும் மதத்தலைவர்களின் படங்கள் வைக்கவும் அனுமதியில்லை. அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். 

சிலை வழிபாடு செய்யும் இடத்திலோ அல்லது கரைக்கும் இடத்திலோ பட்டாசு வெடிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது. விநாயகர் சிலைகள் வழிபாட்டுக்காக நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் கரைத்துவிட வேண்டும் எனவும் எஸ்.பி.சுதாகர் தெரிவித்தார்.

Tags:
#விநாயகர் சதுர்த்தி  # விநாயகர் சிலை  # எஸ்பி சுதாகர் 

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..