விநாயகர் சிலை கரைப்பின் போது பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை, ஆவடி, தாம்பரம் என 3 காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட இடங்களில் மொத்தம் 2,254 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.
சிலைகளை பாதுகாக்கும் பணியில் சுழற்சி முறையில் காவல்துறையினர், சிலை அமைப்பு குழுவினர் ஈடுபட்டு வந்தனர். விநாயகர் சிலை கரைப்பு நான்கு இடங்களில் நாளை நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரக காவல்துறையினர் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்நிலையில், விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாக காவல்துறையினர் விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர். அதில்,
* விநாயகர் சிலை கரைப்பின் போது பிரச்சனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
* விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, மதவாத வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலோ, பிற மதத்தினர் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலோ முழக்கமிடக் கூடாது.
* விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது பாதைகளில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது.
* பாலவாக்கம், பட்டினம்பாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் மட்டுமே சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
* காவல்துறை அனுமதி வழங்கிய பாதைகளில் மட்டுமே சென்று சிலைகளை கரைக்க வேண்டும்.
* எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க ஆவடி பகுதிகளில் 21,800 போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
* விநாயகர் சிலைகளை கரைக்கும் இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விநாயகர் சிலை கரைப்பு காரணமாக நாளை நண்பகல் 12 மணிமுதல் இரவு 8 மணிவரை சென்னை சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் அதற்கு தகுந்தவாறு தங்களது பயண திட்டங்களை மாற்றிக்கொள்ளுமாறு சென்னை, ஆவடி, தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
Tags:
#விநாயகர் சிலை கரைப்பு
# ஊர்வலம்
# பட்டாசுகள்
# காவல்துறை