துபாயில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் திடீரென மாயமானார்.
இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான நபரை வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை பள்ளிக்கரணை அருகே கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி காவ்யா (30). இருவரும் கேட்டரிங் டெக்னாலஜி படித்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் மணிகண்டன் வேலை பார்த்து வருகிறார். காவ்யா துபாயில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். காவ்யா தற்போது சென்னையில் வசிக்கிறார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி அதிகாலை துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக தனது மனைவி காவ்யாவுக்கு போனில் மணிகண்டன் தகவல் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, கணவரின் வருகைக்காக வீட்டில் காவ்யா காத்திருந்தார். எனினும், அவரது கணவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் நிலையில் இருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு சென்று காவ்யா கணவரை தேடியுள்ளார்.
பின்னர் விமானநிலைய மேலாளரிடம் புகார் தெரிவித்தார். அவர் துபாயில் இருந்து வந்த பயணிகளின் பட்டியலை பார்த்து, விமானத்தில் இருந்து இறங்கிய மணிகண்டன் சோதனைகளை முடித்துக்கொண்டு வெளியே சென்றுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். காணாமல் போன மணிகண்டனை காவ்யா மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து சென்னை விமானநிலைய போலீசில் நேற்று காவ்யா புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமானநிலைய வளாகம் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்து, காணாமல் போன பயணி மணிகண்டனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:
#துபாய்
# விமானம்
# சென்னை
# பயணி மாயம்