அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!
By: TeamParivu Posted On: September 29, 2022 View: 66

அக்டோபர் 2-ம் தேதி தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு, கடந்த 2021-22-ஆம் ஆண்டில் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கையினை தாக்கல் செய்து, பல்வேறு வகையான உத்திகளை புகுத்தி, நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

* மூன்று தொலைநோக்குத்திட்டங்கள்

தமிழகத்தில் சாகுபடி மேற்கொள்ளப்படும் நிகர சாகுபடிப் பரப்பை 60 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயர்த்தவும், இருமுறை சாகுபடி செய்யும் பரப்பை இரு மடங்காக்கவும், முக்கிய வேளாண் பயிர்களின் உற்பத்தித்திறனை அகில இந்திய அளவில் தமிழகத்தை முதல் மூன்று இடங்களுக்குள் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு தொலைநோக்கு திட்டத்தை அறிவித்துள்ளது.

* வேளாண்மை- உழவர் நலத்துறையின் முக்கிய திட்டங்கள்

அரசின் தொலைநோக்குத் திட்டங்களை நிறைவேற்றும் வகையில், பல்வேறு உழவர் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்து அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, கிராமங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியை உருவாக்கும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மானாவாரி வேளாண்மையில் அதிக வருமானம் பெறுவதற்கு முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு திட்டம், சிறுதானிய இயக்கம், முதலமைச்சரின் ஊட்டச்சத்து காய்கறித் தோட்டம், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடிப் பரப்பை உயர்த்தும் திட்டம், வேளாண் பணிகளை காலத்தே மேற்கொள்ள வேளாண் இயந்திரமயமாக்குதல், துறையின் இயந்திரங்களை எளிதாக பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இ-வாடகை செயலி, சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்ப்செட் நிறுவும் திட்டம், விவசாயிகளும், பொதுமக்களும் பயன்பெற உழவர் சந்தைத் திட்டத்தினை வலுப்படுத்தும் திட்டம், சிறு, குறு விவசாயிகளை ஒன்றிணைத்து வணிகரீதியாக வேளாண்மைப் பணிகளை மேற்கொள்வதற்கு, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், புதிய உத்திகள் தொடர்பாக கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சி, வேளாண்மையில் தொழில்முனைவோர்களை உருவாக்குதல், வேளாண் விளைபொருட்களை அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு நலத்திட்டங்களை வேளாண்மை-உழவர் நலத்துறை செயல்படுத்தி வருகிறது.

* அக்டோபர் 2 ஆம் தேதி கிராம சபைக்கூட்டத்தில் வேளாண்மைத் துறையின் பங்கு

எதிர்வரும் அக்டோபர் இரண்டாம் தேதி அன்று, தமிழகத்தில் உள்ள 12,525 கிராம பஞ்சாயத்துகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத் துறை சார்பாக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளுக்கும் தனித்தனியான அலுவலர்கள் நியமிக்கப்பட்டு துறையின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்படும். மேலும், முக்கிய தொழில்நுட்பங்கள், அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படுவதுடன் துண்டு பிரசுரங்களும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

நடப்பு ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண்மை பொறியியல், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம், சர்க்கரைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் பயனடைந்த விவசாயிகளின் விபரங்களும் கிராம வாரியாக தயாரிக்கப்பட்டு, கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

எனவே, அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags:
#கிராம பஞ்சாயத்து  # கிராம சபை கூட்டம்  # தமிழ்நாடு அரசு  

  Contact Us
  • Chennai
  • sakthivel@parivu.tv
  • +91 98400 22255
  Follow Us
Site Map
Get Site Map
  About

Parivu News | Breaking News | Latest News | Top Video News. Get the latest news from politics, entertainment, sports and other feature stories..