ஆவின் நிறுவனம் ஈட்டிய கூடுதல் இலாபத்தினை கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளது. ரூ. 4.31 கோடி நிதியை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மதுரை, நாமக்கல் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கினார்.
ஆவின் நிறுவனம் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் மூலம் பால் கொள்முதல் செய்து நுகர்வோர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. மூன்றடுக்கு கூட்டுறவு அமைப்பாக செயல்படும் ஆவின் நிறுவனம் சுமார் 4.05 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் 10,500 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களை கொண்டுள்ளது.
தமிழக கிராமங்களிலிருந்து, தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொள்முதல் செய்யப்படும் பாலினை 27 மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்கள் மற்றும் மாநில அளவிலான தலைமை அமைப்பான தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் இணையம் மூலமாக, சந்தைப்படுத்தப்படுகிறது.
ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3,200 கோடி ரூபாய் பால் பணப்பட்டுவாடா செய்து வசாயிகளுக்கு வருமானம் அளித்து, வாழ்வாதாரத்தினை மேம்படுத்தி வருகிறது. ஆவின் நிறுவனம், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் நிரந்தர வருமானத்திற்கு வழி வகை செய்வதோடு, கிராம பொருளாதாரத்தின் உயர்வுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் ஈட்டும் இலாபத்தினை பால் உற்பத்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்ளுவது ஆவின் நிறுவனத்தின் சிறப்பாகும். இதன்படி நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் நிகர இலாபத்தில் ரூ.55,18,379/- பால் வழங்கிய தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் மற்றும் மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஈட்டிய நிகர இலாபத்தில், ரூ.3,75,64,079/-ஐ பால் வழங்கிய தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூலமாக பால் உற்பத்தியாளர்களுக்கு ஆதரவு தள்ளுபடி ஊக்கத்தொகை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் வழங்கப்பட்டது.
மேற்படி ரூ.4,30,82,458/-ஐ தொகையை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவதால், மதுரை மாவட்டத்தை சார்ந்த 18,170 பால் உற்பத்தியாளர்களும், நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த 15,352 பால் உற்பத்தியாளர்கள் பயனடைந்துள்ளனர். ஈட்டிய கூடுதல் இலாபத்தினை கிராமப்புற பால் உற்பத்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் ஆவின் நிறுவனத்தின் மீது பால் உற்பத்தியாளர்கள் வைத்துள்ள நன் மதிப்பை வளர்க்கவும் அதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்கவும் நல்வாய்ப்பாக அமைந்துள்ளது.
உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் என்றும் போல் ஆவின் நிறுவனத்திடம் தங்களுடைய ஒத்துழைப்பையும் வளர்ச்சிக்கு உறுதுனையாகவும் இருக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. இக்கூட்டத்தில் பால்வளத்துறை ஆணையர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர்.ந.சுப்பையன் இ.ஆ.ப., அவர்கள், அனைத்து மாவட்ட துணை பதிவாளர்கள் (பால்வளம்), மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர்கள், மற்றும் ஆவின் உயர் அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய ஆவினின் @AavinTn முகநூல், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாக்ராம் ஆகிய சமூக வலைத்தளங்களையும், மேலும் கூடுதல் தகவல்களுக்கு 18004253300 என்ற அலைபேசி எண்ணை 24X7 தொடர்பு கொள்ளலாம்.
Tags:
#பால் உற்பத்தியாளர்
# ஆவின் நிறுவனம்
# அமைச்சர் சா.மு.நாசர்