படிப்பறிவற்ற 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022-27 வழிகாட்டு நெறிமுறைகள் கூட்டம் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குனர் சசிகலா வரவேற்றார். பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் குப்புசாமி, இத்திட்டம் குறித்து பேசினார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 5 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ₹9.83 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 15 வயதுக்கு மேற்பட்ட எழுத, படிக்க தெரியாதவர்களை பள்ளி மாணவர்களின் உதவியுடன் கண்டறிந்து, அவர்களுக்கு கல்வி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2021-22ம் ஆண்டில் எழுத, படிக்க தெரியாத 3 லட்சம் பேருக்கு கல்வி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் 3.10 லட்சம் பேருக்கு கல்வி வழங்கப்பட்டுள்ளது. 2022-23ம் ஆண்டில் 4.8 லட்சம் பேருக்கு கல்வி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை 5 லட்சமாக ஆக்க வேண்டும். 2025ம் ஆண்டுக்குள் கல்வி கற்றவர்களின் சதவீதத்தில் தமிழகம் முதல் மாநிலமாக இருக்க வேண்டும் என்பது முதல்வரின் ஆசை. வயதானவர்கள் கல்வியறிவு இல்லாததால் கையெழுத்தோ அல்லது கைநாட்டோ போடுவதால் பலவித இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை தடுக்கவே இந்த இயக்ககம் மூலம் கல்வி அளிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதனை சமுதாயத்திற்கு ஆற்றும் கடமையாக ஆசிரியர்கள் கருதி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
#கல்வி
# அமைச்சர் அன்பில் மகேஷ்