சொத்துக்கள் விற்பனை தொடர்பாக நடிகர் பிரபுவுக்கு எதிராக அவரது சகோதரிகள் தொடர்ந்த மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி மறைந்த நடிகர் சிவாஜிகணேசன் மகள்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்நிலையில் நடிகர் பிரபுவுக்கு எதிரான அவருடைய சகோதரிகள் மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தந்தை சொத்தில் பங்கு தராமல் ஏமாற்றிவிட்டதாக நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் மீது குற்றம் சாட்டி மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் மகள்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும் சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தம் காரணமாக தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது.
சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர் எனவும், சொத்துக்களில் எங்களுக்கு சம பங்கு வேண்டும் எனவும் அவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் இடைக்கால மனுவாக சாந்தி திரையரங்கு சொத்துக்கள் விற்பனையில் பிரபு, ராம்குமார் ஈடுப்பட்டதாகவும், பிரதான வழக்கு முடிவுக்கு வரும் வரை இதற்கான இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும், கோரிக்கைகளில் மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் 2 கூடுதல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிவாஜிகணேசன் மகள்கள் தரப்பு வாதத்தில் அனைத்து சொத்துக்களில் தங்களுக்கு சம பங்கு தரவேண்டும் எனவும், சாந்தி தியேட்டர் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் அந்த சொத்துக்கள் விற்பனைக்கு தடை வித்திக்க வேண்டும் என அவர்கள் தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. பிரபு தரப்பில் சாந்தி தியேட்டர் விவகாரத்தில் அனைத்து நடைமுறைகளும் ஏற்கனவே முடிந்து விட்டன எனவும், இந்த பங்குகள் முழுவதும் 2010-ம் ஆண்டிலயே தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு கைமாறி விட்டதாகவும், குடும்ப பிரச்சனை காரணமாக இந்த வழக்கை தொடர்ந்ததாக அவர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. வாதத்தை கேட்ட நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று மகள்கள் தொடர்ந்த இடைக்கால வழக்கின் கூடுதல் மனுகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Tags:
#உயர்நீதிமன்றம்
# நடிகர் பிரபு
# சொத்துக்கள் விற்பனை